பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011,00:00 IST
கருத்தை பதிவு செய்ய
இன்றைய இளம் பெண்கள் உடல் அழகை பாதுகாப்பதற்காக குறைந்த அளவு உணவு சாப்பிட்டு, ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.இதனால், திருமணத்திற்கு முன்னும், பின்னும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். இளம் பெண்கள் சத்தான உணவை சாப்பிடுகின்றனரா... அல்லது நாகரிகம் என்ற பெயரில் நாவுக்கு முக்கியத்துவம் தரும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுகின்றனரா? சாப்பிடும் அளவை குறைப்பது ஆரோக்கியத்தைகாக்குமா?
கேள்விகளுக்கு "பளிச்' என பதில் தந்தனர், தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி மாணவியர்.
எஸ்.தமீம் நிஷா : இளம் பருவத்தில் பெண்கள் சரியான உணவுகளை சாப்பிடுவதில்லை. வீட்டில் சாப்பிடாமல், கல்லூரி கேன்டீனில் பொரித்த, மசாலா உணவுகளை சாப்பிடுகின்றனர். ஆரோக்கியம் நிறைந்த கேழ்வரகு, கம்பு, சிறுதானியங்களின் முக்கியத்துவம் தெரியவில்லையே.
கே.சண்முகப்ரியா : உணவு கட்டுப்பாட்டின் அர்த்தத்தை தவறாக புரிந்து கொள்கின்றனர். தக்காளி, பப்பாளியை முகத்துக்கு போடுவதை விட, சாப்பிடுவது அழகையும், ஆரோக்கியத்தையும் தரும். "டிவி' பார்த்து கொண்டே சாப்பிடும் ஆபத்தான கலாசாரம் அதிகரித்துவிட்டது.
பி.சந்தியா : சமையல் தயாரிக்கும் விதம் மாறியதால் "பாஸ்ட் புட்' வீட்டையும் ஆக்கிரமித்து விட்டது. கல்லூரி என்.எஸ்.எஸ்., முகாமில் பங்கேற்ற 200 மாணவியரில் ஒருவருக்கு மட்டுமே "ஹீமோகுளோபின்' அளவு சரியாக இருந்தது. மற்றவர்கள் ரத்தசோகை பாதிக்கும் சூழலில் இருந்தனர்.
எம்.ரேணுகா : விவசாயத்தில் ஏற்பட்ட ரசாயன ஆதிக்கத்தால் தாய்ப்பாலும் விஷமாக மாறிவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைக்கு 3 வயது வரை தாய்ப்பால் கொடுத்தது பழைய காலம். ஆனால், தாய்ப்பால் கொடுத்தால் அழகு போய்விடும் என நினைக்கும் பெண்களும் இருக்கின்றனரே.
எ.ரூமானா பர்வீன் : பெண்ணுக்கு கல்வியை விட அழகு முக்கியம் என நினைக்கின்றனர் சிலர். அழகாக இருப்பதற்காக குறைந்தளவு உணவு சாப்பிட்டு பலவீனமாகின்றனர். மார்பக புற்றுநோய், வயிற்று புற்றுநோய், அல்சர் நோய்க்கு ஆளாகின்றனர். அதிக உடல் மெலிவால் மாடல் அழகி ஒருவர் இறந்தே விட்டார்.
ஆர்.ஜான்சி : என்.சி.சி., அணிவகுப்பில் மயங்கி விழும் மாணவியர் அதிகம். முன்னோர்களின் உணவுப்பழக்கத்தால், பலர் 100 வயது வரை மருந்தில்லாமல் ஆரோக்கியமாக வாழ்கின்றனர். ஆனால், நம்ம ஊரு பெண்கள், சாப்பாட்டில் மிளகு இருந்தால் கூட தூக்கி எறிகின்றனர்.
பி.நித்ய ஐஸ்வர்யா : தானிய உணவுகள், கடல் உணவுகளின் முக்கியத்துவத்தை சிலரே உணர்ந்துள்ளனர். வீட்டில் நூடுல்ஸ், பீட்சா, பர்கர், பிரட், ஜாமுக்கு வரவேற்பு அதிகம். வீட்டு வேலை முறைகளும் மாறிவிட்டன. வீட்டு வேலைகளை செய்தாலே, ஜிம்மிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
எம்.இர்பானா ஜெனிபர் : முரண்பட்ட உணவுகளால் பெண்களின் உடலில் இயற்கையாக சுரக்க வேண்டிய ரசாயனம் சுரப்பதில்லை. இதனால், குறைந்த வயதில் பருவமடைதல், மலட்டுத்தன்மை, இதய நோய், சர்க்கரை நோய், மாதவிடாய் கோளாறு ஏற்படுகின்றன.
கே.பிரபீகா: உணவிற்கும், மனோபலத்திற்கும் தொடர்பு உண்டு. தரமற்ற உணவு மனோபலத்தை சீர்குலைக்கிறது. இதனால், பெண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். மிளகு, திப்பிலி, பெருங்காயம், பூண்டு, வெங்காயத்தை உணவில் பயன்படுத்துவோர் குறைவு. சரிவிகித உணவு சாப்பிடாத பெண்கள், பிரசவத்தை எப்படி எதிர்கொள்ள முடியும்.
மேலும் ஹலோ தோழியே செய்திகள்: