FRIDAY, DECEMBER 31, 2010
கடந்து போன நாட்களில், நடந்து வந்த நினைவுகள்!

முதல் இரண்டு ஆண்டுகள் எந்தப் பரிணாமமும் இல்லாமல் சராசரியாக சுற்றிக் கொண்டிருந்தேன். வாழ்வாதாரத்தைத் தேடி மாநகர வீதிகளில் அலைந்து திரியும் ஆயிரமாயிரம் இளைஞர்களில் நானும் ஒருவன் என்பதைத் தவிர, அப்போது எனக்கு வேறு எந்த அடையாளமும் இருந்ததில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கலை இலக்கியத் தளத்திலும், சமூகப் போராட்டக் களத்திலும் நான் பெற்ற கொஞ்ச அனுபவங்கள், சென்னையில் எனது இலக்கைத் தீர்மானிக்க உதவின. நாகர்கோவில் அகில இந்திய வானொலியின் இளைய பாரதம் நிகழ்ச்சிக்காக கவிதைகள் வழங்கிய அறிமுகத்தோடு, 2001 ஆம் ஆண்டு சென்னை வானொலி நிலையத்தில் நான் காலடி எடுத்து வைத்தேன்.
மனிதநேயப் பண்பாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் அன்பைப் பெற்றேன். அப்போது தீபாவளி நேரம். தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒலிப்பதிவுக் கூடத்திற்குள் பிரபலங்கள் வந்து சென்ற வண்ணமிருந்தனர். பழம்பெரும் நடிகர் வி.கே.ராமசாமி வந்தார். நகைச்சுவை நடிகர் வடிவேலு வந்தார். ஒரு மாலை வேளையில் கவிஞர் வைரமுத்து வந்தார். அவரைப் பார்த்த உடன் எனக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. வைரமுத்துவின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு அவரது தீவிர ரசிகனாக இருந்த எனக்கு, முதல் முறையாக அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் செய்வதறியாது திகைத்தேன். ஒரு புன்முறுவலோடும், சில வார்த்தைகளோடும் அவர் என்னைக் கடந்து போனார்.
பிரபலங்களை அடிக்கடி சந்திக்கும் களமாக வானொலி நிலையம் இருந்ததால் அங்கே பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த சந்திப்புகள் தந்த போதையில் நான் அதிகம் மயங்கிக் கொண்டிருந்தேன். எப்படியாவது வானொலி நிலையத்தில் நமது இருப்பை நிரந்தரமாக்கிக் கொள்ள வேண்டும் என்று துடித்தேன். அதே சம காலத்தில் நான் தமுமுக வின் தீவிர அபிமானியாகவும் இருந்தேன். குமரிமாவட்ட தமுமுக மாணவரணி பொறுப்பாளராக நான் செயலாற்றியதனால், மாநில மாணவரணி செயலாளராக இருந்த அண்ணன் அன்சாரியுடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. அவரை சந்திக்க மண்ணடியிலுள்ள தமுமுக அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வேன். அப்போதுதான் பேராசிரியர் ஹாஜா கனியுடன் நட்பு ஏற்பட்டது.



2003 ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலைகளுக்கு எதிரான எனது 'தோட்டாக்கள்' கவிதைத் தொகுப்பு நூல் வெளியானது. தமிழகத்தின் பிரபல கவிஞர்கள் மற்றும் திரைப்பட பாடலாசிரியர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களிடம் இந்துத்துவ மதவெறிக்கு எதிரான கவிதைகளை எழுதிப் பெற்று நூலாகத் தொகுத்தேன். அப்போதுதான் 'சமநிலைச் சமுதாயம்' இதழ் தொடங்கப்பட்டது. அதன் நிறுவனரான ஜாபர்தீன் ஹாஜியாருடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. இலங்கைக்கு ஒரே விமானத்தில் நாங்கள் பயணம் செய்யும்போது ஏற்பட்ட நட்பு அது. அவரும் எனது இதயத்திற்கு இனிய கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களும் இணைந்து தொடங்கிய பத்திரிகை என்பதால் நான் சமநிலையில் எழுத ஆரம்பித்தேன். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொடாவிலிருந்து விடுதலை ஆனவுடன் அவரை சந்தித்து ஒரு சிறப்புப் பேட்டி எடுத்தேன். சமநிலையில் அது முகப்போவியமாக வெளிவந்தது.

கவிக்கோ, அ.மார்க்ஸ், பெரியார்தாசன், திரு.வீரபாண்டியன், சா.பீட்டர் அல்போன்ஸ் ஆகிய அறிஞர்கள் பங்கேற்க மிகச் சிறப்பான வெளியீட்டு விழா நடைபெற்றது. சாதி வெறியர்களால் உடலில் மல நீர் ஊற்றப்பட்டு இழிவு படுத்தப்பட்ட, கீழ உரப்பனூர் முத்துமாரி என்னும் தலித் சகோதரியின் கரங்களால் நூலை வெளியிடச் செய்து, கோவை கலவரத்தில் மகனை இழந்த ஹசனார் அவர்களை பெற்றுக்கொள்ளச் செய்தேன்.





காட்சி ஊடகத்தில் சமூக உரிமைகள் பற்றிய பதிவுகளோடு, கலை இலக்கியம் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளையும் கலந்து வழங்க வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடாய் 2005 ஆம் ஆண்டு இறுதியில் 'மீடியா ஸ்டெப்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன்.

2006 ஆம் ஆண்டில் எனக்கு குறும்படங்கள் பற்றிய அறிமுகம் ஏற்பட்டது. இட ஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு குறும்படத்துக்கான கதையை எழுதிவிட்டு அதை படமாக்கும் முயற்சியை மேற்கொண்டேன். அத்துறை குறித்த ஆழமான அறிவு கொண்ட நண்பர் கெங்கை குமார் அவர்களை சந்தித்து எனது குறும்படக் கதையை கூறினேன். அவர் கதையை கேட்டுவிட்டு இதை குறும்படமாக எடுப்பதைவிட ஆவணப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்றார். அதை எப்படி எடுக்க வேண்டும் என்ற வழிமுறைகளையும் சொல்லித் தந்தார்.அவரது கருத்தையே எனது சகோதரர் சியாதும் எதிரொலித்தார். பின்னர் ஆவணப்படங்கள் குறித்து நிறைய வாசித்தேன். நிழல் திருநாவுக்கரசு அவர்களை சந்தித்தேன். அவர் பயனுள்ள தகவல்களைத் தந்தார். முழுவீச்சில் களமிறங்கி படப்பிடிப்பு செய்தேன். நண்பர் புதுமடம் அனீஸ் அதற்குத் துணை நின்றார்.

ஆர்வலர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். பிறப்புரிமை படத்தின் குறுந்தகட்டை எல்லா முக்கிய தலைவர்களையும் சந்தித்து கொடுத்தேன். படத்தைப் பற்றி அனைத்துப் பத்திரிகைகளும் விமர்சனம் எழுதின.



நிழல்.திருநாவுக்கரசு ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர். மிகவும் உணர்ச்சிப் பூர்வமான விழாவாக அது அமைந்தது. 'பிறப்புரிமைக்கு' கிடைத்ததை விட கூடுதலான ஊடக வெளிச்சம் 'கைதியின் கதைக்கு' கிடைத்தது.
இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற எனது திருமண வரவேற்பில் வாழ்த்துரையாற்றிய திருமாவளவன் அவர்கள் எனது ஆவணப்பட முயற்சிகளைக் குறித்து விரிவாகப் பேசினார். அந்த விழாவில் பங்கேற்க வந்திருந்த நண்பர் அன்சாரி அவர்கள் அண்ணன்.திருமாவின் உரையை கூர்ந்து கவனித்தார். பின்னர் அன்சாரியை நான் சந்தித்தபோது காயிதே மில்லத் ஆவணப்படம் குறித்து பேசுகின்ற வாய்ப்பு ஏற்பட்டது. அவர் மனமகிழ்ச்சியோடு படத்தை தயாரிக்க முன்வந்தார். சென்னை சவேரா ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி ஆவணப்பட அறிவிப்பை வெளியிட்டோம்.
கடந்த பத்தாண்டுகளில் எனது சுழற்சி பல்வேறு பரிணாமங்களைப் பெற்றுள்ளது.தீவிர இயக்கவாதியாக இருந்த நான் இன்றைக்கு தீவிர இயக்க எதிர்ப்பாளனாக மாறியுள்ளேன்.முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எழுச்சியின் நம்பிக்கை கீற்றுகளாக நான் யாரைக் கருதினேனோ அவர்களுடனேயே இன்று முரண்பட்டு நிற்கிறேன். அவர்களின் தொலைநோக்கற்ற செயல்களினால் அவநம்பிக்கை அடைந்துள்ளேன். நான் பங்கெடுத்த களங்களில் எனக்கு உடன்பாடு இல்லாத விசயங்களை தெளிவாக எதிர்த்துள்ளேன். நல்லவைகள் எங்கிருந்தாலும் ஆதரித்தும் வருகிறேன்.
2001 முதல் 2010 வரை இந்த சென்னை வாழ்க்கையில் நெகிழ்ச்சியாகவும், நெருக்கடியாகவும் தேதிகள் கிழிந்திருக்கின்றன. இனி வரும் நாட்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும் மனநிறைவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இலக்குகளை எட்டிப் பிடிக்கும் எனது வேட்கையின் சூட்டில் என்னைக் கவிழ்க்கும் சதிகள் பொசுங்க வேண்டும் என வேண்டுகிறேன். பலங்களுக்கு ஈடாக என்னுள் பரவிக்கிடக்கும் பலவீனங்களை முற்றிலுமாக ஒழிக்க விளைகிறேன்.
ஆண்டொன்று போனால் வயதொன்று போகிறது.
இளமையை இழந்து முதுமையை சுமக்கும் நிலையை நாம் அடைந்து கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு புத்தாண்டிலும் நாம் நமது ஆயுளை இழக்கிறோம். இழப்பு எப்படி கொண்டாட்டமாக இருக்க முடியும்? எனவே கொண்டாட்டங்களை விட்டுவிட்டு
நம்மை நாமே மீளாய்வு செய்யவும், அடுத்தக் கட்ட நகர்வுக்கு திட்டமிடவும் முயற்சி செய்வோம்.
அன்புடன்
ஆளூர் ஷாநவாஸ்
31 -12 -2010 ,சென்னை.
Posted by Aloor Shanav
No comments:
Post a Comment